Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Friday, March 4, 2011

ரூட் மேப் 3

ரூட் மேப்...
ரூட் மேப் 2 - இவைகளைப் படித்துபின் தொடரவும்.

பந்தயப்புறா.

பிறகு பல -மெர்க்குரிப்பூக்கள், இரும்புகுதிரைகள் (கவனியுங்கள் - 'க்' இல்லை), அப்பா, தாயுமானவன், சிநேகமுள்ள சிங்கம், அகல்யா, கடலோர முதலைகள், கிருஷ்ண அர்ஜுனன்,முன்கதை சுருக்கம், இனிது இனிது காதல் இனிது...  இன்னும் எவ்வளவோ. என்ன எழுத்து இது. கதையினூடே வாழ்வு. வாழ்வினூடே விசாரணைகள். விசாரணைகளின்-ஊடே குழப்பங்களுக்கான தீர்வு முன்வைப்பு. படித்த சிலநாட்களுக்கு அனைத்துமே தெளிவு. அதனால் இதுவோ? இதனால் அதுவோ? என்கின்றமாதிரியான எந்த நிகழ்வுக்கும் எந்த எண்ணத்திற்கும் அடிவேர் தேடும் முயற்சி. முன்னமே இருந்த கேள்விகள், தேடல்கள் மற்றும் அவைகள் தூண்டுகிற மூன்றாம்பார்வைகள் தான். கூர்பட்டன (வாடை கொஞ்சம் தூக்கலோ).

என் அந்தக் காலக்கட்டங்கள் விடுதியில் தங்க நேர்ந்தவை. எனக்கான நேரங்கள் நிறைய இருந்தன. பலவற்றைத் தேடிப் படித்தேன். சில என்னைத் தேடி கையில் விழுந்தன.படித்தேன், படித்ததை அந்த வயதுக்குரிய செயல்பாடுகளில் புகுத்திப் பார்க்க ஆரம்பித்தேன். பல நல்விளைவுகளும், சொற்ப பக்கவிளைவுகளும் கிடைத்தன.

படித்தவைகளில் அதிகம் பித்துபிடிக்க வைத்தது பாலகுமாரன் எழுத்துக்கள். மேற்சொன்னமாதிரி படிக்கின்ற சில நாட்களுக்கு, தெளிந்த நீரோடையில் அடிமண் தெரியுமே அந்தப் பார்வைத் துல்லியம். எதிலும் பின்புலம் பார்க்க முடிந்தது. அட... இது சகப்பசங்களுக்கு பார்க்க தெரியாதே... என்றமாதிரியான மைல்ட் மதமதப்பு. நடவடிக்கைகளிலும், எதிர் வினைகளிலும் ஒரு மேல்மட்டத்தனம். இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான்...பிறகு பழைய குழப்பங்களுடனான வாழ்வுநகர்த்தல். பின் அடுத்த புத்தகம்... மீண்டும் பிரச்சனைகளை ஆராய்ந்து, துவைத்து, அலசி, பின்னர் காயப்போட்டு தொங்கவிடல், என்னுடையதையும், சகப்பசங்களைதையும்.

ஒரு மாதிரியான நாட்டாமப் பதவி கிடைத்தது, என்னைவிட பலவீனமானவர்களிடமிருந்து. பார்வையில் சற்று 'தள்ளிநிர்த்தல் (அ) ஒட்டாமை " தெரிந்ததால், மற்ற வயதினர்களுடன் சிநேகமும் கிடைத்தது. அதுவே சிலயிடங்களில் 'பிணமுகம்' பெயெரெடுத்துக்கொடுத்தது கூட.

அவரின் மூலம் சித்தர் பாடல்கள், பகவத்கீதையின் சில ஸ்லோகங்கள், ஓஷோ, ஜிகே என தளம் விரிந்தது. கண்ணதாசனும் வைரமுத்துவும் அதில் சேர்ந்தனர். யாரையும் நிராகரிக்கவில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சுவையில். புத்தகங்கள் நெருக்கமாயின. இதுவும் ஒஷோ சொன்னதுதான்... புத்தகங்கள் நம்மிடம் நெருங்குவது சுலபம். ஏனெனில் அவையுடன் நம் 'ஈகோ'க்கள் அடிப்படுவதில்லை, தூண்டப்படுவதும் குறைவு. பிடித்திருந்தால் கையில், இல்லையேல் தரையில். எழுத்தையும் எழுத்தாளனையும் தள்ளி வைப்பது எளிது. அதேநேரம், ஒத்திருந்தால் கொண்டாடவேண்டியதுதான்; அதனிடம் விழுவதும் மிக எளியது.

இப்போது இந்த வலைப்பூக்கள் வந்த பின்னர் - இது இன்னும் கண்கூடு. என்ன... பிடிக்காவிட்டால் (அ) தன் ஈகோ தூண்டப்பட்டால், தரையில் போடாமல் எழுதியவன் தலையை போடுகிறார்கள். சமயத்தில் மூக்கில் இரத்தம் வேறு. அப்புறம்... ம்ம்ம்... சரி இதை வேறொரு தனிப்பதிவில் தொடர்வோம் (ஆம், நான் அப்படித்தான்... பின் உங்களை மறுபடி வர வைக்கனுமே).

'புல் தானகவே வளர்கிறது' - ஒஷோவின் புத்தகம். மேலும் என்னை புரட்டிப்போட்டது. எதுவும் இயல்பே - என்பது புத்தியில் சம்மணமிட்டுயமர்ந்தது.

3 comments:

  1. ஒரு மாதிரியான நாட்டாமப் பதவி கிடைத்தது, என்னைவிட பலவீனமானவர்களிடமிருந்து. பார்வையில் சற்று 'தள்ளிநிர்த்தல் (அ) ஒட்டாமை " தெரிந்ததால், மற்ற வயதினர்களுடன் சிநேகமும் கிடைத்தது. அதுவே சிலயிடங்களில் 'பிணமுகம்' பெயெரெடுத்துக்கொடுத்தது கூட.--//

    வரிக்கு வரி உண்மை...

    ReplyDelete
  2. என்னதான் அன்று நிறைய பேசினாலும் அந்த ஒரு புல் தானாக வளருகின்றது சொன்ன போது இரவில் போதையிலும் அந்த வரிகளை அதிகம் யோசித்தேன்... ரூட் மேப் அருமை..

    ReplyDelete
  3. 'இதுவும் கடந்து போகும்' - என்கிற மாதிரியான மந்திரவாக்கியம் அது. நன்றிகள் ஜாக்கி!

    ReplyDelete