Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, March 24, 2011

வகை-தொகை:24/03/11

தரம் - என்றால் ஜப்பான் தான் ஞாபகத்தில் வரும். ஆனால் என்ன நடக்கிறது அங்கே? என் தொழில்நுட்ப மேலாளர் அடிக்கடி மேற்கோள் காட்டுவார் டொயடாவின் கோட்பாடுகள் (Toyata's principles)பற்றி. அங்கே ஒரு தகராறு, ஒரு கார்பகுதியை தவறாக தேர்ந்தெடுத்ததால். பிசாத்து பெறாத ஃப்ளோர் மேட் என்பதாலோ? கோடிக்கணக்கில் தண்டம் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது பரவாயில்லை, ஏதோ ஒரு கம்பெனியும் சில உயிர்களும் சம்பந்தபட்டது என்று வைத்துக்கொண்டால். ஆனால் அணுமின் உலை விடயம் அவ்வளவு லேசில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்றில்லை. அட நம்ம நாடுதான் ஒரு தப்பான தட்டுமேலே இருக்கே, அதானாலே பூகம்பத்திற்கு பஞ்சமில்லையே-னு ஒரு கூடுதல் பொருப்பு (ஒரு சின்ன பொறுப்புகூட இல்லையேன்னு  சின்ன 'ர'  போட்டுட்டேன்)   இருக்க வேணாம்? IAEA-வின் எச்சரிக்கையை புறந்தள்ளியாச்சே. எந்த சிஸ்டமும் (பாதுகாப்போ,  தரமோ,  மேலாண்மையோ,  தயாரிப்போ)  ஒரு தொடர்ந்த மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும் காலத்தின் கோலங்களை கணக்கில் கொண்டு. மாற்றங்கள் அவசியமானவை. இல்லையேல் அம்பேல்தான்.

ஒரு ஜப்பானியரின் கடைப்பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகிவிட்டன இப்போது நடந்த கோரத்தில். ஆனால் அடுத்த நாளே ஒரு அறிவிப்பு பலகை அவர் கடையின் வாசலில் - " எரிந்தழிந்தது எனது உடமைகள் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக என் நம்பிக்கையும், உறுதியும் எந்த சேதாரமுமில்லாமல் இருக்கின்றன... வியாபரம் திங்களிலிருந்து இயங்கும்!!!". இனி  "ஃப்னிக்ஸ் பறவை"யை    உதாரணிப்பதைவிட, ஜப்பானியனை" உதாரணிக்கலாம் மீண்டெழுவதற்கு.
---*---
மாற்றம் என்றவுடன் நம் தமிழ்நாட்டு தேர்தல் நிழலாடும். திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்து கொண்டிருக்கிறார்கள் சில வருடங்களாக கேரளாவைப்போல். எனக்கென்னமோ இலையில் திமுகவின் இலவசங்கள் வந்து விழுந்தாலும் இலைக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. இல்லையேல்   'தொங்களில்'  மாட்ட நேரலாம். நம்மக்களை கணிப்பது கடினமே!

கலைஞரின் சொந்த-குடும்பங்கள் வெர்சஸ் அம்மாவின் தத்து-குடும்பம் என்பதில் மக்கள் கொஞ்சமே குழம்பியிருக்கிறார்கள். முதல் குடும்ப(ங்க)த்தில் இரத்த உறவு உள்ளதால் கலைஞருக்குப்பின் தலையெடுக்க திமுகவால் முடியும். ஆனால் இந்த குடும்பத்தில் அதுயில்லையாகயால், தத்து-குடும்பம், எது மாட்டியிருந்தாலும், அம்மாவை சற்று சுயமாகவிட்டால் கட்சியும் பிழைக்கும் அவங்களும் கூடவே. இல்லையேல் அம்பேல்தான்.
---*---
தத்து-குடும்பம் என்றதும் 'மிடாஸ்' ஞாபகத்தில் வந்து ஒரு தண்ணி மேட்டரை எழுதவைக்கிறது. சில நாட்களுக்கு முன் கோரமங்களா ஸ்பென்சரில் நண்பருக்கு தண்ணி வாங்கப்போனோம். சத்தியமாக அவர் குடிக்கமட்டுமே... ஏனெனில் அப்போதுதான் என் தங்கமணி அருளியிருந்த என் கோட்டா முடிந்திருந்தது. போனால், அங்கு ஒரு ப்ரமோஷன் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞன் தன் கையிருந்த வட்டத்தாளில் ஏதோ ஒன்றை ஸ்பிரெயிட்டு வருகிறர்களிடம் நுகரச் சொல்ல, இன்னொருவர் அதை தன் செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.


                    (கையிலும் முகத்திலும் ஸ்பிரேவோடு அவ்விளைஞன்)

என்னிடமும் ஒன்றை நீட்டினான் அந்த இளைஞன் ஸ்பிரெயிட்டு. நுகர, எலுமிச்சை வாசனையடித்தது. சரி, தண்ணியடிப்பவர்களுக்கான "வாய் புத்துணர்வூட்டான் (Mouth Freshner)" போலிருக்கிறது என்று, "என்ன மேக்?"... என்றேன். அவன் சொன்னான் "சார், இது ஸ்மர்ன் ஆஃப் வாட்கா. புது "லைம்" ஃப்ளேவர்... அடிச்சிங்கனா வாசனை வராது". நான் "அப்படியா?! பின்னயேன் தாள்ல அடிக்கிற... என் நாக்குல அடிக்க வேண்டியதுதானே?!!!" என்றேன் ஆவலுடன். மேலும்..."ஏன் இந்த போலீஸ் ஊதானில் மாட்டாதமாதிரி ஒரு சரக்க கண்டுபிடிக்க சொல்றதுதானே" என்றதற்கு "முதல்ல உங்களை காற்றில் ஊதச்சொல்லிதான் முகர்வார்கள். அப்பவே தப்பிக்கலாம் இதை அடித்திருந்தீர்களானால்" பதிலுரைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அந்த போட்டாவை என் நண்பரின் செல்லுக்கு "நீலபல்" தொழில்நுட்ப உதவியால் பிரதியெடுத்துக்கொண்டு "என் ப்ளாக்கில் எழுதுவேன், பரிசோதித்தப் பின்னர்" என்று கூறி அந்த சரக்கில் 'வ' இல்லையாதலால் வேறொன்றை எடுத்துக்கொண்டு, பில் கவுன்டர் நோக்கி நடந்தோம். பின்னாலே ஓடிவந்த அவ்விளைஞன் ஒரு வேண்டுகோளை விடுத்தான்.

அதைப்பார்க்குமுன் என் பரிசோதனைப்பற்றி...

பிறிதொரு நாளில் அந்த பரிசோதனையும் நடக்க வாய்ந்தது  நம் ஜாக்கியுடன். இரண்டுபேருமே உணர்ந்தோம்  சிப்பும்போது அதன் எதிர்த்தடிக்காத தன்மையும், பிறகு ஆல்கஹால் நாற்றம் எழாத குணத்தையும். வீட்டுக்கு சென்றால், ஒரு டெஸ்டிங்கும் இல்லை. ஆக... பரிசோதனை வெற்றி!. ஏதோ என்னால் முடிந்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். இனி நீங்களாச்சி ஸ்மர்ன் லைம்-ஆச்சி. ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் - "DRINK RESPONSIBLY - அதாவுது, சைட்டிஷ் எந்த வறுத்த பருப்பா இருந்தாலும், பொறுப்பா குடிங்க!"

இந்தயிடத்தில் ஜாக்கி- அவர்களுக்கு என் மனமுவர்ந்த வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன். உங்களுக்குதான் தெரியுமே எதுக்குனு.

மீண்டும் அந்த வேண்டுகோள் விடயம்... "சார், நான் காலேஜ் ஸ்டூடண்ட். இது பார்ட்டைம் வேலை. ப்ளீஸ்... ப்ளாக்குல போட்டோ போடும்போது என் உருவம் வராம பார்த்துக்குங்க" என்பதுதான் அது. அதிர்ந்தேன்... இந்த ஆல்கஹால் கம்பெனிகளுக்கு "PROMOTE RESPONSIBLY" என்று சொல்லவேண்டும்.

Thursday, March 10, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்... கடைசிப் பகுதி.

"Love means never having to say you're sorry."

"காதல் என்பதில் 'நீ வருந்துகிறாய்' என்று  சொல்லத்  தேவையில்லை" 

இதுதான் அந்நாவலின் உயிர்வசனம்.

அவனுக்கு தந்தையின் 'மேல்குடி' நடவடிக்கைமேல் வெறுப்பு. ஆனால் அவளோ காதலனின் வெறுப்பை மாற்றும் முயற்சியில் அவனின் கோபத்திற்கு உள்ளாகிறாள், ஒரு சமயம்.  அழுகையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவளை, அவன் தேடுகிறான் பல இடங்களில். காணாமல் வீடு திரும்பினால்... வாசலில் அவள். உணர்ச்சிக் குவியலாய் அவன் சொல்வான் - "I'm sorry". அதற்கு அவள்  சொல்லும்  பதில்தான்  மேலுள்ள  வசனம்.

பிறிதோரிடத்தில் அதே வசனத்தை அவன் தந்தையிடம் சொல்வான்.

இந்த புத்தகத்தை, என் கேபி100-ன் பெட்ரோல் டாங்க் கவரில் துருத்தியப்படி வைத்து, நாங்கள் குடியிருந்த அடுக்குமாடி காம்பவுன்ட் கேட்டைத் தாண்டுகையில், மேல்தளத்து டாக்டர் மாமா அவர்கள், அதைப்பார்த்து அந்த தகவலை பகிர்ந்தார் - "இது படமா வந்ததே".

இவர்தான் என் அன்றைய "ஹாலிபாலி" மற்றும் imdb எல்லாம். அவரின் பரிந்துரையில் ஏகப்பட்ட க்ளாஸிக் ஆங்கில  படங்களை  தேடிப்  பார்த்துள்ளேன்.  க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் (Clint Eastwood) கெளபாய்  தொகுப்புகள்  மற்றும்  டர்டி ஹாரிஸ், வார் படங்கள் - தி லாங்கஸ்ட் டே (ஸ்டார்  ஸ்டட்டட்  படமது),  'டோரா, டோரா, டோரா', வேர் ஈகல்ஸ் டேர்ஸ், எ ப்ரிட்ஜ் டூ ஃபார்... மற்றும் டெரன்ஸ் ஹில், பட் ஸ்பென்சர் (Terence Hill & Bud Spencer) நடித்த பல படங்கள் ஆகியவை அதில் அடங்கும்.

உடனே தேடத் தொடங்கினேன் லவ் ஸ்டோரி (Love Story) வீடியோ டேப்பை பல லைப்ரரிகளில். ஒரு கடையில் கிடைத்தது தூசிகள் அப்பி. ரூல்ட் (ruled)படமாக பார்த்தேன் அப்போது. வசனங்கள் தெரியுமாதலால் சப்டைடில் இல்லாமல் இருந்தது பிரச்சனையாக இல்லை. சென்ற வாரத்தில் மறுபடியும் பார்க்க ஒரு வாய்ப்பு சோனிபிக்ஸில். டைடிலைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை ரெட்வைனுடன் (நம்ம ஹெரிடெஜ்-2000 தாம்பா) டிவி முன் அமர்ந்தேன். சிப்சிப்பாக அனுபவித்தேன் இரண்டையும்.

அலிஸ் (Ali MacGraw ) ஜெனியாக, ரையான் 'ஓ' நில் ( Ryan O'Neal )ஆலிவர் பாரட் IV-ஆகவும் பாத்திரத்தில் இரண்டர கலந்திருந்தனர்.



கதை முன்னரே சொன்னமாதிரி வழக்கமான காதல் தான். ஒரு பெரியயிடத்து பையன், ஒரு 'வொர்கிங் கிளாஸ்' குடும்பத்து பெண்ணுடன், காலெஜ் படித்திருக்கும்போது காதலில் விழுகிறான். அவன் தன் பரம்பரை பணக்காரத்தன வழிமுறைகளையும், அதை புகுத்த துடிக்கும் தன் தந்தையின் கண்டிப்பையும் வெறுப்பவன். அவள் துடுக்கானவள் (போன பகுதியின் உரையாடலை ஞாபகத்தில் கொணர்க), ஆனாலும் அவன் தன் தந்தையின் மேலுள்ள கோபத்தை போக்க முயற்சிக்கிறவள். அந்த கோபத்தைக் கண்டு, ஒரு தடவை, அவன் தன் 'சமூக எதிர்மறை நிகழ்நிலையை' (socially negative status) தான் உண்மையில் விரும்புகிறானா என்று அவனிடமே கேட்கிறவள்.

இவர்கள் காதலின்போது பல நிகழ்வுகள், பின்னர் நம் தமிழ்படங்களில் பலவகைகளில் எடுத்தாளப்பட்டவை. 'குஷி' யில் வரும், விஜய் தன் அம்மாவிடம் போனில் 'ஐ லவ் யூ, ப்ரியா(?)' என்று வைத்தபிறகு வரும் ஜோதிகாவின் கேள்விக்கணைகள் - ப்ரியா?.. யாரு? அம்மா... ஆமாம் நம்ம அம்மா... அதுஅப்படியே ஆனால் என்ன... ஆண்பெண் மாற்றிருப்பார்கள். அதில், அலிஸ் தன் அப்பாவிடம் " I luv u, Phil" என்ற பிறகுவரும். அதே குஷியில் வரும் படிக்கும்போது 'இடுப்ப பார்த்த'... அதில் "காலப் பார்த்த".

அலைபாயுதே-வில் வரும் தேடல் சீன், அதிலிருந்து தான். இவ்விடத்தில் "Francis Lai" யின் பிஜிஎம்-ஐ சொல்லவேண்டும். அலிஸ் இசைப்பள்ளி மாணவியாதலால் பிஜிஎம்-ல் நிறைய மற்ற இசைமேதைகளின் (Mozart, Bach...)  கோர்வைகளை  உபயோகித்திருப்பார்.  ரையான் அவளை அவளின் இசைப்பள்ளியில் ஒவ்வொரு அறையாக திறந்து  தேடும்போது பின்னனியிசையில் அவ்வறைகளிருந்து சேரும் வகுப்புஇசையும், கலவை அற்புதமானது. கீழே உள்ள தீமை கேட்டுப் பாருங்கள்...


நம் இசைஞானியின் ஒத்த கோர்வை; மனதை அள்ளுகிறது.

நாவல் தந்த தாக்கத்தை, அழகாக திரையில் அளித்திருந்தார்கள்.

imdb-யில் மேய்ந்த போது, கிடைத்த சில சுவரஸியங்கள்...
  • அலிஸ் அப்படத்தில் 24/25   வயது   பெண்ணாக நடித்தபோது,   வயது 31. ஆனால் மிகப்  பொருத்தம்  -  ஒரு  அமெரிக்க -  இத்தாலியன்   பாத்திரத்திற்கு. 
  • ரையான் நடித்த ஆலிவர் பாத்திரத்தை நடிக்க மறுத்தவர்களில் சிலர் - டக்ளஸும், ஜான் வாய்ட், ஜெஃப் ப்ரிட்ஜஸ்-ம்.
  •  முதலில் திரைக்கதை தான் எழுதப்பட்டது. படப்பிடிப்பில் இருக்கும்போது நாவலாகி, படம் வெளிவரும்முன் வெளிவந்து சக்கைபோடு போட்டது பெஸ்ட் செல்லராக.
  • Tommy Lee Jones - ன் முதல் படம் - ரையானின் ரூமேட்டாக.
அந்த அர்த்தராத்திரிலேயே படம் முடிந்தவுடன் பதிவாக எழுதிட துடித்தேன். ஏனோ முடியாமல், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னவளுக்கு மெல்லிய முத்தமிட்டு, பின் அணைத்தபடி நானும் தூங்கிப்போனேன்.


Monday, March 7, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...தொடர்ச்சி

அவருக்கு நான் கொடுத்தது அரைமணி நேரங்கள் மட்டுமே. முடிந்தவரையில் பழையநிலைக்கு அதை திருப்பச் சொன்னேன். மறந்தும் வேலையின்போது சிரித்தறியாத அவர் தோராயமாக தலையசைத்தார்.  இப்பொழுது சைலன்சர்சூடு இன்னும் எரிச்சலைக் கூட்டியிருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தேன் சிவப்பு + சைன் தெரிகிறதா எங்கயாவது என்று. சற்றே தூரத்தில் தெரிந்தது ஒன்று, வெள்ளை பல்லிளித்த சுவரில் தொங்கியபடி.

கிட்டேநெருங்கியபோது, ஒரு பழைய கிராமத்து நாட்டுவைத்தியர் இடம்போல் காட்சியளித்ததால், தயங்கி போர்டை பரிசோதித்தேன். ஒரு ஆண்பால் பெயருக்கு பின் MBBS என்றுதான் போட்டிருந்தது. பர்சிலிருக்கும் பணத்துக்கும் தோதாக இருக்கும் என்ற சமாதானத்தோடு குனிந்துபடி உள்ளே நுழைந்தேன் ஆள்அரவமற்ற முன்னறையில். அட அட்லீஸ்ட் ஒரு சின்ன பையன்கூடவா இல்லை டோக்கன் போடுவதற்கு என்றெண்ணியவாறே, ஆடிய திரைச்சீலை வழியே அடுத்த அறையை எட்டாமல் பார்த்தேன். டாக்டர் சீட் காலியாகயிருந்தது (அப்ப நீங்க அப்ளை பண்ணவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கக்கூடாது... நான் மெக் இன்ஜினியர்(மக்கு-யில்லை)). பேஷண்ட் சேரில் புடவைக்கட்டிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார், ஏதோவொரு புத்தகத்தைப் படித்தபடி.

'யெஸ், கம்-இன்' - பியானோவின் இசை. ஏனோ சிறு படப்படப்பு கூடியது; திரையை விலக்கி உள்ளே நுழைந்து அவரைப் பார்த்தேன். வெகுதிருத்தமாக, பளிச்சென்று, நேற்றுதான் கல்லூரி முடித்த தோற்றத்தில் இருந்தார் அந்தப் பெண். இந்த எழுத்தாளர்கள் எப்படித்தான் பெண்களின் அழகை வர்ணிக்கிறார்களோ...?!!! நானும் இங்கே முயன்றேன்... முடியவில்லை. எல்லாபக்கத்திலிருந்தும் தாக்கும் அழகில் டீடெய்ல் பார்ப்பதுக் கடினம். அந்த தாக்கத்தின் வெம்மை மட்டுமே தெரிந்தது எனக்கு அப்போது..., இப்போதும். மிகலேசான புருவநெரிப்பில் தெரிந்த 'என்ன?' என்ற கேள்வியில், அவர் டாக்டர் தானா என்கிற ஆராய்ச்சிக்கு செல்லாமல் (போர்டில் ஆண்பெயர் மட்டும்தான் பார்த்தேன்), சொன்னேன் என் பைக் சாகசத்தை. என்னை உட்கார வைத்து, கைபடாமல் பார்வையிட்டு, கொழகொழவென்றிருந்த ஏதோ லோஷனை அதன்மேல் பரவவிட்டார். ப்ரிஸ்கிருப்ஷன் தாளில் எதோ வரைந்தார். 'இந்த டிடி இன்ஜெக்‌ஷனை வேறு எங்கியாவதுகூட போட்டுக்கொள்ளுங்கள்' என்றிசைத்தார் மறுபடியும்.  மனதில் 'மாட்டேனே'  கூரியவாறே,  வாங்கிவந்து  விடுகிறேனென்று  வெளியில்  விரைந்து சென்று திரும்பினேன் பாட்டிலுடன். அவர் சிரிஞ்சை ரெடியிடுகையில், மேஜையில் மூடியிருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்வையிட்டேன்.

'சீகல்' தான் முதலில் கண்ணில்பட்டது. நம்ம 'ஸ்டீவன் சீகல்' பற்றியதா... தோன்றிய எண்ணத்தோடு நீல அட்டை முழுவதையும் பார்த்தேன். 'டாக்டர்ஸ்' அதற்கு கீழே 'எரிச் சீகல் (Erich Segal)' என்றிருந்தது. ஒரு டாக்டர் 'மருத்துவ' சம்பந்தமா படிக்கலாம்... இவங்க ஏன் 'மருத்துவர்' சம்பந்தமா படிக்கிறாங்க? - குழப்பத்தோடு வெளியேறினேன், விடைபெற்று அன்று.

பின்னொருநாளில், ஒரு நடைபாதைக்கடையில் எரிச் சீகலின் 'லவ் ஸ்டோரி'  கண்ணில்பட்டது. மெல்லியப் புத்தகம் - படிக்க தூண்டும்வகையில். அந்த பெண்டாக்டரின் நினைவுவர, அப்புத்தகத்தை வாங்கினேன். மேற்சொன்ன நிகழ்வுகள், ஒரு புத்தகமும் அல்லது ஒரு எழுத்தாளரும் நமக்கு எப்படியெல்லாம் அறிமுகமாகக்கூடும் என்பதை சொல்லவே. படிக்கலானேன்...



ஒரு மெல்லிய காதல் கதைதான். ஆனால் ஒரு துள்ளலோடும் துடிப்போடும் அதைக் கையாண்டவிதத்தால் மனதை ஆக்கிரமித்தது சட்டென்று. 1970-ல் எழுதப்பட்ட நாவலது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுகள் தாண்டியும் அதன் புத்துணர்ச்சி குறையாமலிருந்ததற்கு, தீம் தான் காரணமாயிருந்திருக்க வேண்டும் - காதல். படித்துப்பாருங்கள்,  இன்னும் படித்திராவிட்டால் - அதைக் க்ளாஸிக் வரிசையில் வைப்பீர்கள்.

மனைவி மரணப்படுக்கையிலிருக்க, கணவன் நினைத்துப் பார்க்கும் ஃப்ளாஷ்பேக்-காக விரியும் எள்ளலும்,  காதலும்,  மோதலும்,  மற்ற  உணர்ச்சிகுவியுலுமான நிகழ்வுகள். வசனங்களே அந்த நாவலின் பலம். இப்படித்தான் ஆரம்பிக்கிறது அவர்களுக்கிடையேயான ஒரு உரையாடல்.

பெண்: "உன்னைப் பார்த்தால் ஒரு முட்டாள்பணக்காரன் போலிருக்கிறது".
ஆண்: "நல்லது... ஆனால் நான் ஏன் ஒரு சமர்த்துஏழையாக இருக்கக்கூடாது?"  
பெண்: "நான்தான் ஒரு சமர்த்துஏழை".
ஆண்: "எது உன்னை சமர்த்தாக்கியது?"
பெண்: "ஏனெனில் நான் உன்னுடன் காபியருந்திருக்கவில்லையே".
ஆண்: ஓஹ்... ஆனால் நான் இன்னும் உன்னை காபியருந்த அழைக்கவில்லையே". 
பெண்: "அதுதான்... நீ ஒரு முட்டாளென்று காட்டிக்கொடுத்தது."

தொடர்வேன்...






Saturday, March 5, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...

கேபி-100-ல் பறந்துக் கொண்டிருந்தேன், பின்னால் என் நண்பருடன். அலுவலகம்விட்டு, சனி மாலையில்  வீடு  திரும்பலாதலால் உற்சாகம் பொங்கியது. அதுவேறில்லாமல் பைக் புதியது எனக்கு. அலுவலகம் திருவொற்றியூரிலும்,  வீடு   ஜாபர்கான்பேட்லும் இருந்த நேரங்கள் அப்போது. தொலைவு சுமார் 25கிமீ அவனிடையில். எனவே அலுவலக வண்டியை தவறவிடும்போதும், வாரயிறுதியான சனிக்கிழமைகளில் மட்டுமே பைக் பயணம்.

கண்டெய்னர் லாரிகளும், பல்லவன்களும், கார்களும் போட்டியிடும் ராயபுர மெயின்ரோடில் என் கருஞ்சிறுத்தையை விரட்டி ஆட்டோக்களையும், மற்ற சகவண்டிகளையும், இடையில்  புகுந்து  பின்னுக்கு  தள்ளிக்கொண்டிருந்தேன்    வெற்றிகரமாக,  அந்த பயங்கரம் நடந்தேறும் வரை.

காசிமேட்டை நெருங்கும்போது, என் நேரெதிரே ஒரு  ஆட்டோ ஊர்ந்துக்கொண்டிருந்தது,  என் வலதுப்பக்கத்தில் ஒரு 800.  800-ன் வேகத்தையும், அவ்வண்டிகளுக்கிடையே உருவாகப்போகும்  இடைவெளியை ஒருமாதிரி கணக்கிட்டு, ஒரு கூர்மையான வெட்டெடுப்போம் என்று ஆக்ஸிலேட்டரை  திருகினேன்  மேலும். அம்மாருதியோட்டியும் அதே (அவர் காரின்)  ஆக்ஸிலேட்டரை  மெதித்தார்போலும், இருவரும் ஒரேநேரத்தில் வேகம் பிடித்ததின் விளைவாக இடைவெளிக் குறைந்து, ஆட்டோவின் பின்பக்கமா அல்லது 800-ன் அடிப்பக்கமா - எதில் சரணடைவது உசிதமென்று அதே வேகத்தில் கணக்கிட்டு, சைடுபாரால் ஆட்டோவின் பின்புறத்தை அழுத்தமாக முத்தமிட்டு,   பெளதிகத்தின் சிலபல விதிகளுகெற்ப்ப  பைக்கிலுருந்து  விடுபட்டு, நிஜமாகவே பறந்து, ஆட்டோவின்   டாப்பை   பருந்துப்பார்வையால் லுக்கிட்டு, சாலையில் லேண்டானேன் சுமார் மூன்றுநான்கு கரணங்களுக்குப்பின்.

தலையில் ஈரம் பிசுபிசுத்தது. தொட்டுப்பார்த்தேன் - வியார்வை! திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன்.  தன்னிருபுறங்களிலும் 800-டும், ஆட்டோவும் சட்டென்று நின்றிருக்க, கவிழ்ந்திருந்த பைக்கில் விடாப்பிடியாக அமர்ந்திருந்தார் என் நண்பர், எதிர்பார்த்தது நடந்தேவிட்டாதா என்று விழித்தப்படி.   மாருதியோட்டியும் நானும் பரஸ்பரம் கும்பிட்டு, சேர ஆரம்பித்த கூட்டத்திலிருந்து அவரை அனுப்பிவைத்தேன். ஆட்டோக்காரரையும் ஒன்றிரண்டு நூறுகளில் அடக்கி, அருகில் கடை வைத்திருந்த மெக்கானிக்கின் உதவியுடன் சிறுத்தையின் ஓடும் நிலையை உறுதியிட்டு, தொங்கும் சைடுபாரும், இன்டிகேட்டருடன் மற்றும் சில உடைந்த பாகங்களுடன், அதைக் கிளப்பி உட்கார்ந்து,  உலுக்கிய உடம்புடனிருந்த  நண்பரை  ஏறிட்டுப்  பார்த்தேன். கூட்டத்தின் நடுவே தன்னுடைய மாரல்சப்போர்ட் கொடுக்கும்தன்மையை காப்பற்ற, என் நடுங்கும் தோளை அவரின் நடுங்கும் விரல்களால் பற்றியப் படி, ஏறி உட்கார்ந்தார்.

பின்னர், தோளில் அவர் விரல்கள் கொடுக்கும் திடீர்திடீர் அழுத்தங்களுக்கு ஏற்ப பைக்கை மட்டுப்படுத்தி ஓட்டி, பாரிஸில் அவரை ட்ராப் செய்தேன். இடையில் ஞாபகத்தில் வந்திருக்கும் செய்யாத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, ஒரு நன்றி(?!)கூட சொல்லமறந்து, விட்டால்போதுமென்று என்னைவிட்டகன்றார். அவர் அகன்றப்பிறகு, இறங்கி பைக்கை நோட்டமிட்டு அதன் சேதத்தையும், என் சேதத்தையும் அளந்தேன். காலில் முட்டிக்கு கீழே குதிகால்பாதமளவு தோல் கருகியிருந்தது - சைலன்சர் சூடு! எரிச்சல் புத்தியில் ஏற, இப்படியே வீடுதிரும்பினால் பெற்றவர்கள் பதறி சிறுத்தையை சீஸ் செய்துவிடுவார்கள் என்பது திண்ணமாதலால், திருத்தங்கள் அவசியமென உணர்ந்து, அரங்கநாதன் சப்வே எதிரிலிருந்த என் ஆஸ்தான கேபி-மெக்கானிக்கிடம் பைக்கை  ஓட்டிவந்து சேர்ப்பித்தேன்.

தொடர்வேன்...








Friday, March 4, 2011

ரூட் மேப் 3

ரூட் மேப்...
ரூட் மேப் 2 - இவைகளைப் படித்துபின் தொடரவும்.

பந்தயப்புறா.

பிறகு பல -மெர்க்குரிப்பூக்கள், இரும்புகுதிரைகள் (கவனியுங்கள் - 'க்' இல்லை), அப்பா, தாயுமானவன், சிநேகமுள்ள சிங்கம், அகல்யா, கடலோர முதலைகள், கிருஷ்ண அர்ஜுனன்,முன்கதை சுருக்கம், இனிது இனிது காதல் இனிது...  இன்னும் எவ்வளவோ. என்ன எழுத்து இது. கதையினூடே வாழ்வு. வாழ்வினூடே விசாரணைகள். விசாரணைகளின்-ஊடே குழப்பங்களுக்கான தீர்வு முன்வைப்பு. படித்த சிலநாட்களுக்கு அனைத்துமே தெளிவு. அதனால் இதுவோ? இதனால் அதுவோ? என்கின்றமாதிரியான எந்த நிகழ்வுக்கும் எந்த எண்ணத்திற்கும் அடிவேர் தேடும் முயற்சி. முன்னமே இருந்த கேள்விகள், தேடல்கள் மற்றும் அவைகள் தூண்டுகிற மூன்றாம்பார்வைகள் தான். கூர்பட்டன (வாடை கொஞ்சம் தூக்கலோ).

என் அந்தக் காலக்கட்டங்கள் விடுதியில் தங்க நேர்ந்தவை. எனக்கான நேரங்கள் நிறைய இருந்தன. பலவற்றைத் தேடிப் படித்தேன். சில என்னைத் தேடி கையில் விழுந்தன.படித்தேன், படித்ததை அந்த வயதுக்குரிய செயல்பாடுகளில் புகுத்திப் பார்க்க ஆரம்பித்தேன். பல நல்விளைவுகளும், சொற்ப பக்கவிளைவுகளும் கிடைத்தன.

படித்தவைகளில் அதிகம் பித்துபிடிக்க வைத்தது பாலகுமாரன் எழுத்துக்கள். மேற்சொன்னமாதிரி படிக்கின்ற சில நாட்களுக்கு, தெளிந்த நீரோடையில் அடிமண் தெரியுமே அந்தப் பார்வைத் துல்லியம். எதிலும் பின்புலம் பார்க்க முடிந்தது. அட... இது சகப்பசங்களுக்கு பார்க்க தெரியாதே... என்றமாதிரியான மைல்ட் மதமதப்பு. நடவடிக்கைகளிலும், எதிர் வினைகளிலும் ஒரு மேல்மட்டத்தனம். இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான்...பிறகு பழைய குழப்பங்களுடனான வாழ்வுநகர்த்தல். பின் அடுத்த புத்தகம்... மீண்டும் பிரச்சனைகளை ஆராய்ந்து, துவைத்து, அலசி, பின்னர் காயப்போட்டு தொங்கவிடல், என்னுடையதையும், சகப்பசங்களைதையும்.

ஒரு மாதிரியான நாட்டாமப் பதவி கிடைத்தது, என்னைவிட பலவீனமானவர்களிடமிருந்து. பார்வையில் சற்று 'தள்ளிநிர்த்தல் (அ) ஒட்டாமை " தெரிந்ததால், மற்ற வயதினர்களுடன் சிநேகமும் கிடைத்தது. அதுவே சிலயிடங்களில் 'பிணமுகம்' பெயெரெடுத்துக்கொடுத்தது கூட.

அவரின் மூலம் சித்தர் பாடல்கள், பகவத்கீதையின் சில ஸ்லோகங்கள், ஓஷோ, ஜிகே என தளம் விரிந்தது. கண்ணதாசனும் வைரமுத்துவும் அதில் சேர்ந்தனர். யாரையும் நிராகரிக்கவில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சுவையில். புத்தகங்கள் நெருக்கமாயின. இதுவும் ஒஷோ சொன்னதுதான்... புத்தகங்கள் நம்மிடம் நெருங்குவது சுலபம். ஏனெனில் அவையுடன் நம் 'ஈகோ'க்கள் அடிப்படுவதில்லை, தூண்டப்படுவதும் குறைவு. பிடித்திருந்தால் கையில், இல்லையேல் தரையில். எழுத்தையும் எழுத்தாளனையும் தள்ளி வைப்பது எளிது. அதேநேரம், ஒத்திருந்தால் கொண்டாடவேண்டியதுதான்; அதனிடம் விழுவதும் மிக எளியது.

இப்போது இந்த வலைப்பூக்கள் வந்த பின்னர் - இது இன்னும் கண்கூடு. என்ன... பிடிக்காவிட்டால் (அ) தன் ஈகோ தூண்டப்பட்டால், தரையில் போடாமல் எழுதியவன் தலையை போடுகிறார்கள். சமயத்தில் மூக்கில் இரத்தம் வேறு. அப்புறம்... ம்ம்ம்... சரி இதை வேறொரு தனிப்பதிவில் தொடர்வோம் (ஆம், நான் அப்படித்தான்... பின் உங்களை மறுபடி வர வைக்கனுமே).

'புல் தானகவே வளர்கிறது' - ஒஷோவின் புத்தகம். மேலும் என்னை புரட்டிப்போட்டது. எதுவும் இயல்பே - என்பது புத்தியில் சம்மணமிட்டுயமர்ந்தது.

Thursday, February 24, 2011

வகை-தொகை:23 / 02 /11

தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகப்பட்சம் ரூ.16 லட்சங்கள் செலவு செய்யலாம்........ - செய்தி.

என்ன எழவுடா இது?... எதற்காக செலவு அவர் செய்யவேண்டும். மக்களால் தேர்ந்தடுக்கப்படும் பிரதிநிதி தானே அவர். இதில் நிதி எங்கே அவசியமாயிற்று? தன்னை விளம்பரம் செய்யவா? அப்படி செலவு (சொந்த காசுப் போட்டோ, கட்சிக் காசோ) செய்து தன்னை தேர்ந்தெடுப்பட வைத்தால், முதலில், போட்ட முதலை எடுப்பாரா? அல்லது தொகுதி மக்களுக்கு சேவை செய்வாரா? என்னதான் நேர்மையானவராக இருந்தாலும் போட்டதை எடுத்திட்டு பண்ணுவோமே என்று ஆரம்பித்து ஊழலில் பிஹெஜ்டி வாங்கிவிட்டுதான் ஓய்வார்.

மக்களின் பங்களிப்பு அவசியம் இங்கே. தேர்தல் துறை, தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பட்டியலை, அம்மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதி சரிபார்க்கப்பட்ட அவ்வேட்பாளர்களுக்கு ஒரு கணக்கை ஆரம்பித்து, அதில் மக்களின் நிதிப்பங்களிப்பை சேர்க்க செய்யவேண்டும் (இது கட்சிகள் செய்யும் உண்டியல் குலுக்கல்களுக்கு மாற்று தான்). அதிலிருந்தே அவர்கள் செலவுச் செய்து தேர்தலை சந்திக்கவேண்டும். வேண்டுமானால் குறைந்தபட்ச தொகையாக வேட்பாளரின் பங்களிப்பு இருக்கலாம். இதனால் மக்களின் ஈடுபாடு தேர்தலில் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் பிரதிநிதியை கண்டெடுக்க முனைவார்கள், அவர்களுக்கு உதவிச் சேர்ப்பார்கள், மற்றும் தேர்தல் நாளில் அவர்களின் ஓட்டும் அதிகமாகலாம். இப்போது வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் வலைத்தகவல் தொடர்பினால் இது சாத்தியமே. வெளிப்படையான அணுகுமுறை அதிகரிக்கும் இதனால்.
***
வெளிப்படை. இந்த படத்தைப் பாருங்கள். இது ஒரு IAS ஆபிசர் அலுவலக அறையில் cctv -யால் எடுக்கப்பட்டதாம்.


                                இமேஜ்: பெங்களூர் மிர்ரர்.

தவறு. இது ஒன்றும் 'ஸ்டிங் ஆபெரசன்' இல்லை. அந்த அரசு அதிகாரியே தன்அலுவலக அறையில் பொருத்தி, அதனுள்ளேயான நடவடிக்கைகளை உலகுக்கு தெரியப்படுத்துகிறார். இடம்: பெங்களூர் எலெக்ட்ரிசிட்டி போர்டின் எம்டி அறை. அந்த முன்மாதிரி காரியத்தை செய்தவர் ஒரு தமிழர் (இப்படியும் ஒரு தமிழர்). பெயர் திரு. மணிவண்ணன்.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில் வெளிவரும். அதில் அவரின் பிரத்யோகப் பேட்டி இடம்பெற முயர்ச்சிக்றேன். என் ஆத்மா நண்பரின் நண்பர்; பல பின்னனி தகவல்களைத் தெரிவித்துள்ளார்.அதனால் சாத்தியப்படலாம். இப்போதைக்கு இதை கிளிக்குங்கள்.
***

சில நாட்களாகவே இடதுகால் கட்டைவிரலில் வலி. இன்று அது அதிகமாகவே அலுவலக இடையில் கிளம்பி, என் மனைவியை அழைத்துக்கொண்டு அப்பலோ கிளினிக்கு சென்றேன். சரியான இடத்தை ஒரே விரலால் அழுத்தி என்னை அலற வைத்துவிட்ட டாக்டர், வேலைப்பளு கொடுக்கும் மனழுத்ததை காரணித்து யூரியாவில் முடிச்சிட்டார். இரத்தத்தை பரிசோதிக்க சொல்லி அந்த அறைக்கு வழியனுப்பினார். மனைவி என்எதிரே நிற்க, தமிழர் போலிருந்த அந்த நர்ஸ் சிரிஞ்சை ரெடியிட்டார். முகத்தை நிர்மலமாக வைத்து என்மனைவி முகத்தை பார்த்தபடி, சிரஞ்சின் நீடிலை என் கைநரம்பில் உள்வாங்கி அதன் வெற்றிடத்தை சிவப்பினால் நிரப்பினேன். மனைவி சற்று ஆச்சர்யமாக "வலிக்கலையா?" என்றார். "உன் முகத்தை பார்திருந்தேனில்லையா" என்று அந்தப் பந்தை சிக்சருக்கு அனுப்பினேன். அதற்க்கு "அதில்லை, எனக்கு கூட இவர்கள் முன்பு வலிக்காமல்-தான் எடுத்தார்கள், அதை கன்பிர்ம் செய்தேன்" "குட் வொர்க்" என்றார் அந்த நர்சைப் பார்த்து. அவர் "பழக்கம்-தான் மேடம். மூன்று வருட அனுபவம். இருந்தாலும் சார் சொன்னது நல்லா இருந்த்தது. வெளியே இப்படி பேசுறாரே, வீட்டில் என்ன பேசுவார்?! பொறாமையா இருக்கு" ஆச்சர்யப்பட்டார். என் மனைவி "அவர் வெளியில் பேசுவதுதான். வீட்டில் ஒன்றுமில்லை " என்றுக் கூறி எல்லைகோட்டைத் தாண்டி பந்தை உள்ளேதள்ளி அதை கேட்சும் பிடித்தார். கங்குலிக் கனக்காய் என் அதிர்ஷ்டத்தை நொந்தப்படி வீடு திரும்பினேன் ஓய்வெடுக்க.
***
டிவியில் பழைய "மாயாபஜார்". என்டியார் கிச்சுவாக வெளுத்துக்கட்ட, நம்பியார் சகுனியாக நரித்தனம்காட்ட, ஜெமினி அபிமன்யுவாய் துள்ள, ரங்காராவும், சாவித்ரியும் முறையே கடோத்கஜனாகவும், பலராமர் பெண்ணாகவும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுகொண்டிரந்தனர். தங்கவேல் வேறு நடுவில் இரகளையுடன். கூர்மையான மற்றும் எள்ளலான வசனங்கள். அதிலொன்று - 'குதுகுலமாயிருக்கையில் குதர்க்கம் கூடாது' மற்றும் நம்பியாரை அருகில் வைத்துக்கொண்டு என்டியார் சொல்லும் " சகுனி இந்த வீட்டிலிருக்க, அசல் சனி எந்த வீட்டில் இருந்தாலென்ன?' குத்தல். பாடல்கள் "ஆகா இன்ப நிலாவினிலே" வும் "கல்யாண சமையல் சாதமும்" காதலும் நகைச்சுவையாகவும் மனதை வென்றன. மொத்தத்தில் நல்ல ஒய்வு.
***
.

Tuesday, February 22, 2011

மாடுகள் - மேயறதும், நக்கறதும்.

"ர்ர்ரிட்டது" என் செல்பேசி இன்றுக்காலையில்.
அழைப்பையேற்று சொன்னேன் 'வணக்கம், ஜாக்கி'.
"அவரு 'வணக்கம் ஜாக்கி' ன்னு சொல்றாரு, நீங்களே பேசுங்க" என்கிற பெண் குரலுக்குப் பின் ஜாக்கி " காலை வணக்கம் யுவா, இதுதான் என் லோக்கல் எண்" என்றார்.
அடடா, சகோதரிப் போல... ஜாக்கி ஒரு கலாட்டா செய்யஇருந்ததைக் காலியாக்கிட்டேனோ என்றேண்ணியப்படி, பதிலுரைத்தேன் "அதான் மழை காட்டிகொடுத்துவிட்டதே, பெங்களுருக்கு ஒரு நல்லவர் விஜயம்-னு".
அவர் கொடுத்தது ஒரு தெய்வீகச் சிரிப்பு பதிலாக " ஹஹஹ்ஹா".

மேலும் மிகச்சிறிய உரையாடலுக்கு பிறகு, அலுவலகத்துக்கு கிளம்புவதிலுள்ளேன் என்கையில் அவர் சொன்னார் " எங்கம்மா சொல்லியிருக்காங்க மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்ககூடாதுன்னு... நீங்க கெளம்புங்க பின்னர் பேசுவோம்".
நானும் குட்டை, மட்டை -னு ஏதோ ஆரம்பித்து, அதுக்கு இது செட்டாகாதே என்று பரஸ்பரம் இணைப்பைத் துண்டித்தோம். ஆனால் என் எண்ணங்கள் தொடரிட்டன. விளைவு இந்தப் பதிவு.

எது மேயற மாடு? எது நக்கிற மாடு?. இந்த சொல்வாடை பொதுவாக இருப்பதுதான். சிலருக்கு போன தலைமுறை சொற்றொடர், திட்டுவதற்கு.

மேய்வது வேலைசெய்வதாம். நக்குவது ஓபி-யடிப்பதாம் அல்லது வேலைஇல்லாததாம்.

கோடைகால விடுமுறைக்கு ஊரிலிருக்கும்போது நடந்தது இது. தாத்தாவின் மளிகைக்கடைக்கு சரக்கெடுக்க என் மாமாப்பையன் சைக்கிளில் பக்கத்துக்கு நகரத்திற்கு செல்வது வழக்கம். அவன் என்னை விட ஒன்றிரண்டு வயதுதான் மூத்தவன். அன்றைக்கு செல்லும்போது, நானும் பின் கேரியரில் தொத்திக்கொண்டு உதவிப்பெடலிடலானேன். பாத்துபோய்விட்டு வாங்க என்றார் எங்கள் ஆயா.
வெயில் காலையிலிருந்து மதியத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. நகரத்தில் வியர்வைப் பொங்க நுழைந்து கடைத்தேருக்குப் போகும் வழியில் ஒரு சினிமா போஸ்டர். "Hands of steel " - மிரட்டியது. நான் பாண்டுவின் (அவன் பெயர்) முதுகைச் சுரண்டினேன். என்பார்வை போகும் பாதை வழியே போஸ்டரைப்பார்த்தான். ஒன்றும் பேசவில்லை. அடிக்கபோகும் கமிழனை கூட்டிகழித்தவனைபோல் சைக்கிளைத் திருப்பினான் திரையரங்கை நோக்கி. இங்க்லீஷ் படந்தானே சீக்கிரம் முடிஞ்சிடும் - என்பது சமாதானம்.

இடைவேளை சமோசா, முறுக்கோடு, படம் பார்த்து, கொடுத்த காசுக்கு குறைவில்லாமிருந்த மகிழ்ச்சியில், மளிகைச்சரக்கோடு வீடு திரும்பலானோம். வழியில் பாண்டு சொன்னான் "தோ பார், நீ ஊர்லிருந்து வந்திருக்கே. என்னன்னு கேட்ட உன்ன சொல்றேன். நீ பார்த்துக்கோ;உன்னை திட்டமாட்டாங்க". டீல் ஒகேவுடன் கடையையடைந்தோம்.

தாத்தா கல்லாப்பொட்டியுலும், கேட்டச் சரக்கை எடுத்துகொடுக்க ஆயா, பக்கத்தில் தராசுலருகிலும் அமர்ந்திருந்தனர். ஸ்டாண்ட் போட்டு சைக்கிளை நிலைக்கொண்டுவருவதற்க்கு முன்னரே "என்னடா லேட்டு?" என்ற தாத்தாவின் அதிர்ந்த கேள்வியால் நிலையிழந்தோம். "கஸ்டமரு எவ்ளோ நேரமா காத்துனிருக்கார் பாருங்க" என்று தொடர்ந்தார். மேல்துண்டோடு, சவரம் செய்யப்படாத, வெண்மை கொஞ்சம் தூக்கலாகஇருந்த மூன்றுநாள் தாடியோடு வெளிபெஞ்சில் உட்கார்ந்திருந்தவரை அப்போதுதான் லுக்கிட்டோம். ஒரு நமநமப்போடு அந்தப் பெருசு இருந்ததாகப்பட்டது. அப்படியென்ன சரக்காயிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், பாண்டு பையிலிருந்த அந்த 301 பீடிக்கட்டையில் ஒன்றை பிரித்துக் கொடுத்தான். தாத்தாவின் முன்னர் கேள்விக்கு பதில்சொல்லும் விதமாக, ஆயா என்னைப்பார்த்து "இவனாலத் தானிருக்கும்" என்றார் உறுதியாக. பீடியில் ஒன்றைப்பத்த வைத்தப்படியே "அக்கா கேட்டதுயில்ல... மேயற மாட்ட நக்கிற மாடு கெடுத்துருக்கும்" என்று வாயால் பின்னூட்டம் அடித்து நடையைக்கட்டியது அந்தப் பெருசு.

அவரின் முதுகை வெறித்தேன் "கணக்குச் சொல்லி வாங்கிப்போக வேறந்த இடமும் இல்லாதாலே, இருந்து வாங்கிபோற நீ, இந்த கருத்தைச் சொல்றியா?" என்று கடுப்புடன் நினைத்தவாறே.

இப்படியாக நாம் ஒவ்வொருவரும் கேட்டுருக்கக்கூடிய ஒரு சொல்வாடை தான், வெவ்வேறு சந்தர்ப்பத்தில்.



எனக்கென்னம்மோ நக்கற மாடு கொஞ்சம் விவரமோ என்றுத் தோன்றுகிறது. பின்னே?... நல்லா மேயவிட்டு, உடம்பை தேத்தவிட்டு,... காம்பு பிழியக் கறக்கின்ற அல்லது நுரைத்தள்ள வண்டியிழுத்த கொடுமையெல்லாம் அனுபவித்து, சரி இனிமேல் நோஞ்சானகவே இருப்பது உத்தமம் என்று நக்கிக்கொண்டிருக்கலாம். அதன் அனுபவப்பாடம் மூலம் மேயறதை மாற்ற முயற்சித்திருக்கலாம்.
நாம் அதை, கெடுப்பது என்கிறோம். இந்த மனிதர்களே மோசந்தான்.

Friday, February 18, 2011

பயம் நல்லது!

'வீரம்'னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது - இது ஒரு படத்தில் கமல் சொன்னது, ரேபான் கண்ணாடியணிந்து கண்களை மறைத்தபடி.

'அட இது கொஞ்சம் சுலபம் போல' என்று நினைத்து, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல், ஓரிரு எதிர்-வார்த்தைகளை உதிர்த்து, சில சமயம் சில மனிதர்களை நேர்க்கொண்டாலும், ஆடும் கால்கள் உண்மையை "நான் உள்ளேன், ஐயா " என்கின்றன.

'இளங்கன்று பயமறியாது' என்பார்கள். என் இளமைக் கால ஞாபகங்களில் பயங்களும், தயக்கங்களும்-தான் தங்கள் BookMarks - ஐ போட்டுவைத்துள்ளன. அந்த தயக்கங்களும் பயங்களால் நேர்ந்தவைதான்.


மூன்றாம் வயதில், அப்பா என்னருகில் உட்கார்ந்து தொடைகள் சிவக்க, "அ-ஆ" "A -B " க்களை என் மண்டையில் ஏற்றியபோது - பயம். அடிகளை தவிர்க்க "அ-ஆ" "A -B " க்களோடு சமரசம் செய்துக்கொண்டு, அவைகளை மண்டையில் உட்காரவைத்தேன். விளைவு, அது என்னை வகுப்பில் முதலிரண்டு மாணவானாக உட்காரவைத்தது.

ஒழுக்கமற்றோ, சுத்தமற்றோ இருந்தால் பள்ளியிற் விழுகின்ற பிரம்படியும், போடுகின்ற முட்டிக்கால்களும், ஆசிரியர்களின் அசூசை பார்வைகளும் - பயம். வசதியில்லாவிட்டாலும் இருப்பதைக்கொண்டே என்னை "பளிச்'சென்று காட்டியும், ஈயாடினாலும் தலையாட்டாமல் ஆசிரியரை நேர்ப்பார்வையுடன் 'கவனி'த்த வகுப்புக்களாலும், அது என்னை வகுப்புத் தலைவராக்கியது.

பள்ளிமதியஉணவு இடைவேளையில், தெருவில் பசங்களோடு ஓடிப்பிடித்து விளையாடுகையில் கத்தி உச்சரித்த "மயிர்", மிதிவண்டியில் போன ஒருவரை நிறுத்தி "ஏம்பா... பார்க்க நல்லபுள்ளை மாதிரிருக்க... ஏன் கெட்டவார்த்த பேசுற?" என்று அதட்ட வைத்தது. அதுமுதல் வெளியிடங்களில் தெளிக்கப்படும் 'ஒரு சொல்'களும், கூரியப் பார்வைவீச்சுக்களும் - பயம். நிதானித்து, சற்று தயக்கத்தோடும் வெளியிடங்களில் என்னை வெளிப்படவைக்க, அது வாங்கிக்கொடுத்த பட்டம் "நல்ல புள்ளை".

அப்பா வாரயிறுதி நாட்களில் வெளியூர் செல்லும்போதெல்லாம், திரும்பும் நேரம் வருகையில் வீட்டுத் திண்ணையில், தெருவில் நின்று எதிர்ப்பார்க்கையில், மனதில் எழும் 'விபத்து' கற்பனைகளும், அது தரும் " நாளை பிறகென்ன?" என்ற வெறுமைகளும் அடிவயிற்றில் தந்த - பயம். வருடங்களை வீணாக்காமல், வாய்ப்புக்களை நழுவவிடாமல் செய்து, அது வாங்கிகொடுத்தது ஒரு வேலை -குறைந்தபட்ச வருமானத்துடன் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்திசெய்ய.

பயங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டுடன், வெவ்வேறு சூழ்நிலைகளால், எனது அடிவயிற்றின் ஒரு உணர்வாய், ஒவ்வொருக் காலகட்டத்திலும், இருந்து வந்திருக்கிறது இன்றும்கூட. பயங்களே என்னை பயப்பட வைத்தும், யோசிக்க வைத்தும், கவனிக்க வைத்தும், செயல்பட வைத்தும் இன்று ஒரு தலைமைப் பொறுப்பைக் கொடுத்துள்ளது குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி.

பிறகென்ன அது என்னை தவறே செய்ய வைத்ததுயில்லையா? செய்திருக்கிறேன். அவை கொடுத்த வடுக்களும், கொடுத்துக் கொண்டிருக்கும் வருத்தங்களுமே இப்போது என்னை மீண்டும் அதில் போடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன.

அப்படி தடுக்காவிட்டால்?.... மெல்ல... எழுகிறது பயம்.

தொடர்வேன்.

Wednesday, February 16, 2011

பதிவு உலகில் ஒரு நேர் சந்திப்பு!

நான் பதிவுலகின் வாசகராகி கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாகி விட்டது. நான் ஒரு பதிவராகி - ஒரு நிமிடம்... அட அதில்லை... ஒரு நிமிடம் பொறுங்கள் என்று சொல்லவந்தேன், profile -அ பாத்துட்டு வர்றனும்-லே.
சரி, நான் ஒரு பதிவராகி (சொல்லவே-இல்லைதான், மன்னியுங்கள்) கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகி விட்டது. அது எங்களுக்கு ஏழரை ஆகிவிட்டது-ன்னு டைமிங்-லாம் முயற்சிக்கக் கூடாது. அந்தளவுக்கு என்னத்தையாவது எழுதி உங்கள படிக்கவச்சாதானே. அப்படியும் ஒன்றிரண்டு எழுதி சில ஜாம்பவான்களுக்கு லின்கிட்டு பின்னூட்டமெல்லாம் வாங்கியது உண்மைதான். டவுட்னா போய் செக்- பண்ணிக்கோங்க (அப்படியாவது படிக்கட்டும்).

அதனால் நான் என்னை ஒரு பதிவராக முன்னிருத்தாமல், ஒரு சாதா வாசகனாகவே முன்னிருத்திக்கொள்ளத் தகுதிப்பட்டுள்ளேன். அதென்ன "சாதா" ? ஏன் 'ஸ்பெசல்" இல்லை?யென்றால் இல்லைதான். நான் பின்னூட்டமிடுவது மிக சொல்பம் அதில் கருத்து சொல்வது பல்பம்... இல்லை... அதைவிட சொல்பம். டைம் இல்லாமில்லை... "ந ப, ந ப" வோடு நிறுத்திக்கொள்வதில் ஒரு நிறைவு.

இந்நிலையில் பதிவுலக ஜாம்பவான்களில் ஒருவரான "ஜாக்கி" சேகரோடு ஒரு நேர் சந்திப்பு அதுவும் பெங்களூரில் நடந்தது. அதாவது நான் போய் அவரைப்பார்த்தேன் (ஹிஹி).

இதுவரையில் பதிவர்களோடு என் தொடர்பென்பது ஒரு பின்னூட்டம், ஒரு தொலைபேசி அழைப்பு, மற்றும் g -chat அவ்வளவ்வே. அதுவும் என் முதல் அழைப்பாக இருந்தது கார்க்கிக்கு. பிறகு எனக்கு முதல் அழைப்பாக இருந்தது மயிலிடமிருந்து. அதுவும் ஒரு g -chat மூலம் ஆரம்பித்து செல்பேசி அழைப்பில் முடிந்தது. இதையெல்லாம் வேறொரு பதிவில் தொடரவேண்டிய விடயங்கள். ஆகவே ஒரு தற்காலிக முற்றும் தற்பொழுது. என்ன? எழுந்திட்டிங்க... உட்காருங்க. முற்றும் இந்த பாரா சம்பந்தபட்டதுக்கு மட்டுமே.

ஜாக்கியுடனான அந்த சந்திப்பு நிகழ்ந்த இடம் ஒரு உணவகம். மதிய வேலை... அதனால் மதிய உணவுடனான ஒரு பகிர்தல். இருவருக்கும் நேரம் வரையருக்கபட்டிருந்தது. ஆனாலும் என்னை மிகவும் குளிர்வித்தார் அவரின் இயல்பான, தளர்வான வாய்மொழி மூலமும், உடல்மொழி மூலமும். பதிவில் படிப்பதை போன்றேருந்தது அவரின் நேர்பேச்சும். சற்று காரளாக, மொருவளாக, நிறைய யதார்த்தமாக, மற்றும் குறைவில்லாத வெளிப்படையாக. பேச்சின் மையம் (இலக்கிய) வாசிப்பதின் ஆரம்பமான சுஜாதா, பாலகுமாரன் என்றேருந்தது. அவற்றின் ஊடாகவே பரஸ்பர சுய அறிமுகங்களும் நடந்தன.

பக்கத்து ஊர்காரர்களாக வேறு இருந்ததால் பேச்சினிடையே நிறைய இளந்தளிர் இடக்குறிப்புகள், நிகழ்வுக்குறிப்புகளுடன் வந்துவிழுந்த வண்ணமிருந்தன. இருவரும் ஒரே தள(ல)தில் இருப்பதாக அவரே கூறியபோது, சின்ன மகிழ்ச்சி மனதில் (பிரபலமாக இருப்பதை தவிரஎன்று நினைக்கிறேன்).

மொத்தத்தில் நாவிற்கு இரு சுவையுடனாக (உரை மற்றும் உணவு)முடிந்தது ஒரு ஆரம்பமான அந்த சந்திப்பு.

நன்றி ஜாக்கி!

பின்குறிப்பு: புகைப்படங்களை நான் எடுக்கவில்லை. 'சரக்கு'-இருக்கும்போது 'சைட் டிஷ்' போதைய்யேத்ரன்னு குதிக்கக்கூடாதுயில்லே ;-)